கிரிக்கெட்
வீரர்கள் மட்டுமல்ல, அம்பயர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!
இந்தியாவில் தற்போது ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்திய அரசுக்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் பிசிசிஐக்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மடிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் தேவையா? என்ற குரல் மக்கள் மத்தியிலும் எழுந்து வருகிறது.
அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களில் சிலர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் விலகி சொந்த நாட்டுக்குத் திரும்ப தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து வீரர்கள் மட்டுமின்றி அம்பயர்களும் விலகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டு நடுவர்கள் விலகி விட்டதாகவும் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் என்றும் இன்னொருவர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த பால் ரைபில் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக இவர்கள் இருவரும் தெரிவித்த போதிலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக விலகி இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.