உலகம்
போயிங் நிறுவனத்தில் 2000 பேர் வேலைநீக்கம்.. டிசிஎஸ்-க்கு அடித்த அதிர்ஷ்டம்..!
அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் தனது 2000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ள நிலையில் இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனத்திற்கு செம அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பிரபல விண்வெளி நிறுவனமான போயிங், 2023 ஆம் ஆண்டில் நிதி மற்றும் மனிதவளத் துறைகளில் சுமார் 2000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில நாட்களில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடையவும் சிக்கன நடவடிக்கை எடுக்கவும் செலவுகளை குறைக்கவும் இந்த வேலையை நீங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு போயிங் நிறுவனம் 15000 ஊழியர்களை புதிதாக வேலை எடுத்தது என்பதும் பொறியியல் மற்றும் உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்படும் நபர்கள் செய்த வேலையை இந்தியாவில் பெங்களூரில் உள்ள டாட்டா கன்சல்டிங் சர்வீஸ் மூலம் வேலையை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் டிசிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பணி கிடைக்கும் என்பதால் மிக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி மற்றும் மனிதவள துறையில் தான் அதிகபட்சமாக வேலை குறைப்பு இருக்கும் என்று குறிப்பாக 1500 பேர் நிதி துறையிலும் 400க்கும் மேற்பட்டோர் மனிதவளத் துறையிலும் வேலை நீக்க நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது போயிங் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.