தமிழ்நாடு
5 மாதங்களுக்கு பின் இயங்கியது ஊட்டி மலை ரயில்: பயணிகள் உற்சாகம்!
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் உதகமண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மலை ரயில் இயங்கியதை அடுத்து பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. அதன்பின் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்ததை அடுத்து பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று முதல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மலை ரயில் இயக்கப்படும் என ஏற்கனவே தென்னிந்திய தென்னக ரயில்வே தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று காலை முதல் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கிளம்பியது. இந்த ரயிலில் 150 பயணிகள் பயணம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் ஊட்டி மலை ரயில் இயங்க தொடங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மலை ரயிலில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து கொண்டு கொரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் ரயில்வே துறை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.