தமிழ்நாடு
தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் பொதுமுடக்கமா?
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை தேர்தல் முடிந்த பின் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தன. சமீபத்தில் பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தேர்தல் முடிந்தபின் மக்கள் கசப்பான சம்பவங்களைச் சந்திக்க வேண்டி நேரிடும் என்று மறைமுகமாக பொது முடக்கம் குறித்து குறிப்பிட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேர்தலுக்குப்பின் பொது முடக்கம் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஒரு சில கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தமிழகத்திலும் ஒருசில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மட்டும் பிறப்பிக்கப்படுமா? அல்லது இரவு நேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.