கிரிக்கெட்

கோலி இல்லாத அணியை வழிநடத்தி ஆஸி.,யை வீழ்த்திய ரஹானே… வெற்றிக்குப் பின் ஆற்றிய டிரெஸ்ஸிங் ரூம் உரை! #Video

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்த நாட்டின் மண்ணிலேயே வீழ்த்தி, சில நாட்களுக்கு முன்னர் வரலாற்றுச் சாதனைப் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் அணியின் கேப்டன் அஜிங்கியே ரஹானே, வெற்றிக்குப் பின்னர் அணியினர் மத்தியில் ஆற்றும் நெகிழ்ச்சி உரை வைரலாகி உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மிக நீண்ட தொடர் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி, டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. பின்னர் ஆரம்பித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, வரலாற்றுப் படுதோல்வி அடைந்தது. எப்படியும் டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மண்ணைக் கவ்வும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் கணித்துக் கொண்டிருந்தனர்.

அதற்கு ஏதுவாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பினார். பல முன்னணி வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. குழப்பமான சூழலில் களமிறங்கிய இந்திய அணி, அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டது.

தொடர்ந்த நடந்த மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டியிருந்தது. ஆனால் தன் அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணி, அந்த வெற்றியைத் தடுத்து நிறுத்தி ஆட்டத்தை டிரா செய்தது.

எல்லா பகைகளையும் தீர்த்துக் கொள்ள ஏதுவாக கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அமைந்தது. முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. குழுவாக இந்திய அணியின் செயல்பாடு மூலமும் வலுவான ஆஸ்திரேலிய அணி வீழ்த்தப்பட்டது. தொடரையும் இந்தியா 2- 1 என்ற ரீதியில் கைப்பற்றி கெத்துக் காட்டியது.

இந்நிலையில் 4வது டெஸ்ட் வெற்றிக்குப் பின்னர், அணியினருடன் டிரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் அஜிங்கியே ரஹானே உரை ஆற்றியபோது, ‘முதல் டெஸ்டில் நடந்ததற்கும் அதன் பின்னர், அந்தத் தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்று மீண்டு வந்ததும் மறக்க முடியாத ஒன்று. இதைப் போன்ற வெற்றிகள் அடிக்கடி கிடைத்து விடாது. ஆனால் நாம் அதைச் செய்து காட்டினோம்.

இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் அணியில் இருக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்தது என்பது உண்மை. அது தான் மிகவும் மன மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும் விஷயமாக எனக்கு இருக்கிறது. அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று நெழிச்சித் ததும்ப பேசினார். சுற்றி இருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ரஹானே பேச பேச கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். இது குறித்தான வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 

Trending

Exit mobile version