உலகம்
காபூல் நகருக்குள் புகுந்தது தாலிபான் படை: ஆப்கன் அதிபர் பதவி விலகுகிறாரா?
அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் வெளியேறியது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பதும், அந்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வந்த தாலிபான்கள் படை தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
காபூல் நகரை தாலிபான்கள் கைப்பற்றி விட்டால் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தாலிபான்கள் அமைப்பு மற்றும் ஆப்கான் அரசு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தாலிபான்கள் அமைப்பின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப் படும் என்றும் அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என்றும் காபூல் நகரம் தாலிபான்களால் தாக்கப்படவில்லை என்று ஆப்கன் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனால் ஆப்கனில் ஆட்சி மாற்றம் குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலம் கடந்த பின்னர் காபூல் நகருக்கு அமெரிக்க படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் பிடன் உத்தரவிட்டு இருப்பதாகவும் இதற்கு தாலிபான்கள் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.