இந்தியா
இந்தியா வரவிரும்பும் ஆப்கன் நாட்டினர்களுக்கு இ-விசா கட்டாயம்: மத்திய அரசு
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றினார்கள் என்பதும் இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள வெளிநாட்டினர் உள்நாட்டினர் என பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்நாட்டினர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஒரு சிலர் இந்தியாவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் அவர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் ஆப்கன் நாட்டில் இருந்து வருபவர்கலால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இ-விசா முறையில் மட்டுமே இந்திய பயணம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா வர விரும்பும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் https://www.indianvisaonline.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவிசா மூலம் விண்ணப்பித்து அதன் பிறகு இந்தியா வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்றும் தனிமைப்படுத்துதல் காலத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.