தமிழ்நாடு
தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என நம்புகிறோம்: இட ஒதுக்கீடு ரத்துக்கு பின் பாலு பேட்டி!
எம்பிசி பிரிவில் வழங்கப்பட்ட இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த அரசாணையின் படி இந்த ஆண்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த அரசாணைக்கு எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியானது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக தீர்ப்பளிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் தீர்ப்புக்கு பின் பேட்டி அளித்த போது ’21 பேர் உயிர் தியாகத்தில் பெறப்பட்ட 20 சதவீத இட ஒதுக்கீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக பயனடைந்த சமூகங்கள் இந்த ஒதுக்கீடு அரசாணையை எதிர்த்து வழக்கு நடத்தி அதனை ரத்து செய்ய வைத்து இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டு பொது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டிருந்தது. ஆனாலும் தீவிரமாக இந்த வழக்கை நடத்தி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தாங்கள் வேண்டுகோள் விடுப்பதாகவும் இந்த வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று முழுமையாக நம்புவதாகவும் மேல்முறையீட்டு போது தன்னையும் ஒரு தரப்பாக பாமக இணைத்துக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.