தமிழ்நாடு
‘சசிகலா நல்லா இருக்கணுங்க..!’- அதிமுக கே.பி.முனுசாமி உருக்கம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா நல்ல உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சசிகலா பற்றி கே.பி.முனுசாமி, ‘அதிமுகவினர் மனிதாபிமானம் படைத்தவர்கள். எதிரிகள் கூட தனிப்பட்ட முறையில் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். அந்த வகையில் சசிகலா அம்மையார் சீக்கிரமே பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு அவர் சேவை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.