தமிழ்நாடு
அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மீது திடீர் நடவடிக்கை: கனிமொழி காரணமா?
அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் அவர்கள் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் அவர்களில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண விழாவில் நவநீதகிருஷ்ணன் பேசியபோது கனிமொழி குறித்தும் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் குறித்தும் புகழ்ந்து பேசினார். குறிப்பாக கனிமொழி தனது சகோதரி போன்றவர் என்றும் நாடாளுமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என தனக்கு கற்றுக்கொடுத்தவர் திமுக எம்.பி. கனிமொழி என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்பி அவர்கள் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழியை புகழ்ந்து பேசியதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என அதிமுக வட்டாரத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.