தமிழ்நாடு
தேனியில் போலீஸ் வாகனத்திலேயே பணம் விநியோகம் செய்யும் அதிமுக: தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு!
தேனி மக்களவை தொகுதி இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.
ஆரம்பம் முதலே அதிமுக தரப்பு பணம் விநியோகம் செய்து வருவதாக தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டி வருகிறார். நேற்று ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்த தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ் தனது மகனை வெற்றி பெற வைக்க 1000 கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதிமுகவினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி கொண்டு அமமுகவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக, டிஎஸ்பி, இன்ஸ்பெக்ட்டர் உள்ளிட்ட காவல்துறை வாகனங்களிலேயே பணத்தை எடுத்துச் சென்று ஓட்டுக்காக அதிமுகவினர் பணத்தைக் கொடுக்கின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூரிலிருந்து ஒரு டீமை வரவைத்துள்ளது அதிமுக. அவர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் சம்பளம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வைக்கின்றனர். அதிமுக இந்த அளவுக்கு மோசமாக பிரச்சாரம் செய்ததை நான் பார்த்ததில்லை. சம்பளத்துக்கு ஆள் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது அதிமுக தரம் தாழ்ந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார்.