தமிழ்நாடு
சட்டசபையிலிருந்து தங்களது பொருட்களை காலி செய்த அமைச்சர்கள்; வைரலாகும் புகைப்படங்கள்!
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆளுங்கட்சியான அதிமுக, 66 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.
திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால், மு.க.ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி அதிமுகவின் அமைச்சர்கள் சட்டசபையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை காலி செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள், தங்களுக்கான அறைகளில் வைத்திருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்கள், பல்வேறு பொருட்கள் உள்ளிட்டவைகளை இன்று வாடகை வண்டி வைத்து காலி செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்தான புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்த ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் தோல்வியைத் தழுவி உள்ளார்கள். சுமார் 11 அமைச்சர்கள், திமுக வேட்பாளர்களிடம் தேர்தலில் தோல்வியை சந்தித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.