தமிழ்நாடு

அதிமுகவை தவறாக பேசினால் நாக்கை அறுப்போம்: அமைச்சரின் வன்முறை பேச்சு!

Published

on

அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், காவிரி டெல்டா பகுதிகளில் அதிமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் அதிமுக அரசை விமர்சிப்பவர்களை சரமாரியாக சாடிய அமைச்சர் துரைக்கண்ணு, யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் ஆவேசமாக.

நாக்கை அறுத்துவிடுவோம் என அமைச்சர் ஒருவரே வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version