தமிழ்நாடு
அம்மா ஸ்கூட்டர் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதே தெரியாமல் பேசிய அதிமுக அமைச்சர்
வேலைக்கு செல்லும் பெண்களுக்காக வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை, கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியுள்ளார்.
திண்டுக்கலில் இலவச மானியம் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, அதிமுக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், திண்டுக்கலில் மூன்று கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.
இதுதொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, ‘எல்லோருக்கும் முதலில் சைக்கிள் கொடுத்தாங்க. அப்றம் எல்லோரும் கல்லூரியில் படிக்கிறாங்க. எனவே, கல்லூரி மாணவிகள் பயனடையும் வகையில் மானியில் விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஸ்கூட்டர் 50 ஆயிரம் ரூபாய் என்று சொன்னால், அதனை 25 ஆயிரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்’ இவ்வாறு பேசினார். உண்மையில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டமானது வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. ஆனால், அதிமுக அமைச்சரே இந்தத் திட்டத்தை தவறாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.