தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்பட ஒருசில அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 43 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவேங்கைவாசல் என்ற பகுதியில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென சோதனை நடத்தி வருவதால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.