தமிழ்நாடு
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு: திட்டமிட்டபடி நடக்குமா?
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி, வாபஸ் பெறும் தேதி, வாக்குப்பதிவு தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியையும் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் திடீரென 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தினால் கள்ள ஓட்டு போடுவதற்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பாவியாக நியமிக்க வேண்டும் என்றும், அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 14ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவையும் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.