இந்தியா

சந்தேகத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் செயல்பாடு: மசோதாக்களை நிறைவேற்ற மறைமுகமாக உதவுகிறதா?

Published

on

மருத்துவக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிராக பேசிய அதிமுக எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை மக்களவையில் மசோதாக்களை எளிதாக நிறைவேற்றி விடுகின்றன. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் சற்று சிரமப்படுகின்றன. ஆனால் இந்த சிரமத்தை அதிமுக உதவியுடன் கடந்து சென்றுவிடுகிறது பாஜக. முன்னதாக முத்தலாக் விவகாரத்தில் மக்களவையில் அதனை ஆதரித்து வாக்களித்த அதிமுக தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக பேசியது.

எதிராக பேசிய அதிமுக வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. இதனால் மசோதாவுக்கு எதிரான ஓட்டுகள் குறைகிறது. மசோதாவும் எளிதில் நிறைவேற்றப்படுகிறது. இதனை திமுக எம்பி கனிமொழி ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில் மீண்டும் அதே யுக்தியை பயன்படுத்தி மேலும் ஒரு மசோதா நிறைவேற உதவியுள்ளது அதிமுக.

தேசிய மருத்துவ ஆணைய மசோதா கடந்த ஜூலை 29-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் பேசும்போது, நீட் தேர்வை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும். தற்போதைய தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நெக்ஸ்ட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் மசோதா மீது பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகள் குறித்து பதிலேதும் அளிக்கவில்லை. இதனையடுத்து வாக்கெடுப்பு நடைபெற இருந்த நேரத்தில், நீட் தேர்வு குறித்து மத்திய அரசு உறுதிமொழியளிக்காததைச் சுட்டிக்காட்டி மாநிலங்களவையிலிருந்து அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தானே. ஏன் வெளிநடப்பு செய்து மருத்துவ ஆணைய மசோதாவையும் எளிதில் நிறைவேற்ற உதவி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது எதிர்ப்பது போல எதிர்த்து மசோதாவை ஆதரிக்கும் அனுகுமுறைதான். மக்களை ஏமாற்றுவதற்காகவே இப்படி எதிர்த்து பேசிவிட்டு வெளிநடப்பு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாமல் இருந்திருக்கும்.

Trending

Exit mobile version