தமிழ்நாடு
சென்னையில் பணப் பட்டுவாடா செய்த அதிமுக- தடுத்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக!
தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்னும் நோக்கில் பணப் பட்டுவாடா செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக தேர்தலுக்கு முன்னர் கடைசி ஒரு வாரத்தில் பல்வேறு இடங்களில் சில கட்சிகள் பணப் பட்டுவாடா செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் வீடுகளில் பணப் பறிமுதல் செய்து வருகிறது தேர்தல் ஆணையம். இருப்பினும் அனைத்துக் கிடுக்குப் பிடி நடவடிக்கைகளையும் தாண்டி பல்வேறு வகைகளில் பணப் பட்டுவாடா என்பது நடந்து தான் வருகிறது.
முசிறி தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜனிடம் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முசிறியில் *ஓட்டுக்கு 200 கொடு* என்று பேச்சு வார்த்தை நடத்திய போது அதையும் வீடியோ எடுத்துப் பகிர்ந்த உடன்பிறப்பு… pic.twitter.com/b1p5jEMuDO
— வணங்காமுடி® (@itz_katti) April 3, 2021
2021 ஆம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை ஆன்லைன் பணப் பரிமாற்ற செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறி வருகிறது. இந்நிலையில் சென்னையில் அதிமுகவினர் சிலர், மக்களுக்குப் பணப் பட்டுவாடா செய்த போது மாட்டிக் கொண்டனர்.
சென்னை, கலங்கரை விளக்கம் பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும் என்ற நோக்கில் சில கட்சிப் பிரமுகர்கள் மக்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த திமுகவினர், அவர்களைத் தடுத்து அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்தான காணொலிக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.