தமிழ்நாடு
‘அதிமுக எங்கள கூப்பிடலைங்க…’- கோபித்துக் கொண்ட பிரேமலதா
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் முதல் பொதுக்கூடம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வரவுள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முழு வீச்சில் ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவும் தனது தொடக்கப் பொதுக்கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
முன்னதாக பொதுக்கூட்டம் தொடர்பாக அதிமுக, ‘வருகின்ற 27.12.2020 அன்று காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்று தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் துவக்கி வைக்கும் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றி பெற, நாம் நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம்தான் இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம். இதில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேமதலா, ‘இதுவரை தொடக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள எங்களுக்கு எந்தவித அழைப்பும் அதிமுக தரப்பிடமிருந்து வரவில்லை. எங்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் ஜனவரி மாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.