தமிழ்நாடு
ஓபிஎஸ் கருத்துக்கு ஆதரவு தரும் நிர்வாகிகள்: உடைகிறதா அதிமுக!
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பக்கம் அதிமுக நிர்வாகிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் குறிப்பாக அதிமுகவின் ஜேசிடி பிரபாகரன் என்பவர் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓபிஎஸ் கருத்தை விமர்சனம் செய்து கேபி முனுசாமி அளித்த பேட்டியால் தென்மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சசிகலா தொடர்பான ஓபிஎஸ் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பால் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு கோஷ்டிகளில், ஓபிஎஸ் கோஷ்டியினர் சசிகலாவை மீண்டும் வரவேற்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் ஆதரவளித்த நிலையில் சசிகலா விரைவில் அதிமுகவில் இணைவது உறுதி என்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வருவது உறுதி என்றும் கூறப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலைமை வந்தால் ஈபிஎஸ் தரப்பு தனிக்கட்சி ஆரம்பிக்குமா? அல்லது சசிகலாவுடன் சமரசம் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.