தமிழ்நாடு
அதிமுக-பாஜக சுயமரியாதை இழந்த அடிமை கூட்டணி: காட்டமாக விமர்சித்த காங்கிரஸ்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கும் இடையே தான் போட்டியே நிலவுகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து அரசியல் களத்தை சூடாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. காங்கிரஸ் நின்று வெற்றி பெற்ற தொகுதியை கூட்டணி தர்மப்படி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் ஒதுக்கி உள்ளார். ஆனால் எதிரணியில் உள்ள அதிமுக தனது கூட்டணி கட்சி தமாகாவிடமிருந்து தொகுதியை பறித்து போட்டியிடுகிறது.
அதிமுக இரு அணிகளுக்குள் ஏதாவது பிரச்னை என்றால் பஞ்சாயத்து செய்வது மட்டுமே பாஜகவின் வேலையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் மோடி, அண்ணாமலை படங்களை பயன்படுத்துவது இல்லை. பாஜகவை விலக்கி வைத்து இந்த தேர்தலை சந்திக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார். திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடித்தும், செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி என்பது சுயமரியாதை இழந்த அடிமை கூட்டணியாக உள்ளது என்று காட்டமாக விமர்சித்தார்.