தமிழ்நாடு
அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து!
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளிலும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து இன்று அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெறுவதாக இருந்த அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அதிமுக தரவில்லை என தேமுதிக அதிருப்தி அடைந்து இருப்பதால் தான் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
அதிமுக கூட்டணியில் ஒருவேளை தேமுதிக இடம் பெறவில்லை என்றால் தேமுதிகவின் அடுத்தகட்ட நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.