தமிழ்நாடு
அதிமுகவை மிரட்டி கூட்டணி வைக்கும் பாஜக: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை மிரட்டி தான் பாஜக கூட்டணி வைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளை விட மாநில கட்சிகளுக்கு தான் செல்வாக்கு அதிகம். மாநில கட்சிகளின் ஆதரவு, துணை இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஒன்றும் செய்ய இயலாது. இது தான் தமிழகத்தின் நிலைமை. இந்நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் திமுக உடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளநிலையில் மற்றொரு தேசிய கட்சியான பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டணி பாஜகவால் அதிமுகவை மிரட்டி, பயமுறுத்தி வைக்கப்பட்ட கூட்டணி என காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் அதிமுகவில் இரு வேறு வகையான கருத்துகள் நிலவுகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற ஒருதரப்பினரும், பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று ஒருதரப்பினரும் கருத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மாறுபட்டு போய்விடக் கூடாது என்பதற்காக டெல்லியிலிருந்து அமைச்சர்களை அனுப்பி, அவர்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை நிர்ப்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயன்று வருகிறது என்றார்.