தமிழ்நாடு
தேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுக, அண்ணா திராவிட கழகம் ஒன்றிணையும்: திவாகரன் பரபரப்பு பேட்டி!
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் தொண்டர்கள் தினகரன் மற்றும் அதிமுக என இரண்டு தரப்பினரிடமும் பிரிந்து கிடக்கின்றனர். தேர்தலுக்கு பின்னர் இரு தரப்பும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த இரு தரப்புடன் திவாகரனின் அண்ணா திராவிட கழகமும் ஒன்றிணையும் என திவாகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை மீட்க தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதேப்போல சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தினகரனுக்கு எதிராக அரசியல் செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா திராவிட கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, அமமுக, அண்ணா திராவிட கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணையும். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்ய ஆம்புலன்ஸில், போலீஸ் ஜீப்பில், போலீஸ் வேனில் பணம் போய்க்கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது வெறும் கண்துடைப்பு நாடகம். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதிமுகவினரே மணல் ஏற்றுமதி செய்கின்றனர் என்று குற்றச்சாட்டை வைத்தார்.