தமிழ்நாடு
ஆதிவாசிகள்கூட மரியாதையாகப் பேசுவார்கள்; ஆனால் அமைச்சர்கள்?
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என அதிமுக சார்பில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் ஆவேசமாக. நாக்கை அறுத்துவிடுவோம் என அமைச்சர் ஒருவரே வன்முறையை தூண்டும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் அதிமுகவைத் தவறாகப் பேசுகிறவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தினகரன், ஆதிவாசிகள்கூட மரியாதையாகப் பேசுவார்கள், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதுபோல இவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி கவிழ்ந்தால் யார் எங்கிருப்பார்கள் என்றுகூடத் தெரியாது என்றார்.