தமிழ்நாடு
நடிகை புகார் எதிரொலி: அடையாறு பெண் ஆய்வாளர் இடமாற்றம்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதும் மூன்று முறை மணிகண்டன் அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க சொல்லி வலியுறுத்தியதாக குற்றச்சாட்டுகள் கூறி இருந்தார் என்பதும் தெரிந்ததே.
இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிகண்டன் வழக்கில் விசாரணை சரியாக நடைபெறவில்லை என அடையாறு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதா மீது நடிகை சாந்தினி குற்றச்சாட்டு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிகண்டன் மீதான மோசடி வழக்கை ஆய்வாளர் சுதா முறையாக விசாரிக்கவில்லை என சாந்தினி புகார் அளித்திருந்த நிலையில் அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் சுதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் 214 ஆய்வாளர்கள் மாற்றப்பட்ட போது சுதாவும் மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடையாறு காவல் அடையாறு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக விஜயகுமாரி என்பவர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து நடிகை சாந்தினி புகாரை அவர் விசாரித்து வருவதாகவும் இந்த வழக்கை முறையாக விசாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மணிகண்டனின் மீதான பாலியல் வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் நடைபெறவிருப்பதாகவும், இந்த வழக்கு வெகு விரைவில் முடிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.