இந்தியா
ஒரே ஒரு அறிக்கை.. மீண்டும் ஏற்றத்தில் அதானி குழும பங்குகள்.,.!
கடந்த சில நாட்களாக அதானி குழுமங்களின் பங்குகள் மிக மோசமாக சரிவை சந்தித்த நிலையில் தற்போது அதானி வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக மீண்டும் ஏற்றத்தில் உள்ளன.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன என்பதும் இதனால் பங்குச்சந்தையை ஆட்டம் கண்டதாகவும் கூறப்பட்டது.
அதானி குழுமங்களுக்கு உதவ சில பணக்காரர்கள் முன்வந்துள்ளதாகவும் எனவே அவரது சிக்கல் விரைவில் தீர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதானி குழுமங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்தன என்பதும் இதனால் அவரது சொத்து மதிப்பு வெகுவாக குறைந்து உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் 20 வது இடத்திற்கும் பின்னுக்கு தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதானி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தனது கடன்கள் முழுவதையும் திரும்ப செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஐயாயிரம் கோடி கடனை முன்கூட்டியே செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அதானி குழுமங்களின் பங்குகள் 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்றம் கொண்டதாகவும் ஒரு சில பங்குகள் 5% முதல் 10 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதானி குழுமத்திற்கு தற்போது சுமார் 40,000 கோடி கடன் இருக்கும் நிலையில் அதில் 5000 போது கடனை உடனடியாக திரும்பச் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மொத்த கடனையும் விரைவில் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதானி குழுமங்களின் நிறுவனங்களை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை வைத்து மீண்டும் அவருடைய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருவதால் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை காரணமாக தொடர் சரிவினை சந்தித்து வந்த அதானி குழுமத்தின் பங்குகள் தற்போது ஏற்றத்தில் இருப்பது அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.