இந்தியா
அமெரிக்க நிறுவனத்தை சமாளிக்க அமெரிக்காவிலேயே வக்கீல்களை பிடித்த அதானி.. வேற லெவல் மோதல்..!
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ள நிலையில் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதனை குழுமம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமெரிக்காவிலேயே வழக்கறிஞர்கள் குழுவை அதானி குழுமம் நியமித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் ஷார்ட் செல்லிங் நிறுவனத்திற்கு பெயர் பெற்றது என்பதும் இந்நிறுவனத்தின் அறிக்கை காரணமாக பல நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அடுத்த குறியாக அதானி குழுமம் இருந்த நிலையில் அந்த நிறுவனத்தின் அறிக்கை வெளியான பிறகு அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த வாரம் கணிசமாக குறைந்துள்ளன.
அதானி குழுமத்தின் பங்கு கையாளுதல் மற்றும் மோசடி குறித்த அறிக்கை பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் ஏற்பட்ட தாக்கத்தை சமாளிப்பதற்காக அமெரிக்காவிலேயே வழக்கறிஞர் குழுவை அதானி குழுமம் நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் ஆகிய மூத்த அமெரிக்க வழக்கறிஞர்கள் குழு தற்போது அதானி குழுமம் எதிர்கொள்ளும் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த நிறுவனம் ஹிண்டன்பர்க் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தாலும் ஆச்சரியப்படுவது இல்லை.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் ஏற்பட்ட சரிவை தடுத்து நிறுத்த அதானி குழுமம் செய்த இந்த சட்ட நடவடிக்கையால் மீண்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் உயருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.