சினிமா செய்திகள்
தமிழ் தெரியவில்லை என்றால் தமிழகத்தில் இருந்து ஓடிவிடுங்கள்: பிரபல வங்கிக்கு நடிகை கண்டனம்
தமிழ் மொழி தெரியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு ஓடி விடுங்கள் என்றும் குறைந்தபட்சம் ஆங்கிலம் கூட தெரியவில்லை என்றால் தென்னிந்தியாவிலிருந்து ஓடி விடுங்கள் என்றும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நடிகை ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சொர்ணமால்யா சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ள நிலையில் அவரது வங்கி குறித்து சந்தேகம் கேட்பதற்காக வாடிக்கையாளர் சேவை எண்ணை அணுகினார். அப்போது வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரியும் நபர் இந்தியில் மட்டுமே பேசி உள்ளார். அவருக்கு ஆங்கிலம் கூட தெரியவில்லை.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி பேசுபவர்கள் என்று எண்ண வேண்டாம். அப்படி ஒரு எண்ணம் இருந்தால் தென்னிந்தியாவிலிருந்து உங்கள் வங்கி சேவையை நிறுத்தி விட்டு வட இந்தியாவுக்குச் சென்று விடுங்கள். வாடிக்கையாளர் சேவை மையத்தை சேர்ந்தவர் ஆங்கிலம் கூட தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அந்த வங்கியின் தரப்பிலிருந்து உங்கள் புகாரை ஏற்றுக் கொண்டு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்றும், குறைகள் இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தவும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் தனது புகாரில் தெரிவித்து மீண்டும் இந்தி மொழி மட்டும் பேசுபவர்கள் தென் இந்தியாவை விட்டு சென்று விடுங்கள் என்றும் தமிழ் தெரியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு சென்று விடுங்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சொர்ணமால்யாவுக்கு ஏற்பட்ட இந்த மொழி பிரச்சினை குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.