சினிமா
சுதந்திர போராட்ட வீராங்கனை படம்: 28 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ராமராஜன் பட நடிகை!
சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் ரீஎண்ட்ரியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவருடைய கேரக்டரில் சாந்திப்பிரியா நடிக்கவுள்ளார். இவர் நிஷாந்தி என்ற படத்தில் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு அவர் பல தமிழ் தெலுங்கு இந்தி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் கடைசியாக கடந்த 1994ஆம் ஆண்டு ஹிந்தி படம் ஒன்றில் நடித்த நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சரோஜினி நாயுடு படத்திற்காக ரீ-என்ட்ரி ஆகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
உண்மையைச் சொல்வதானால், நான் தற்போது சொல்ல வார்த்தையில்லாமல் இருக்கிறேன். ஆனால் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில், தடைகளை உடைப்பதில் மற்றும் சுதந்திரத்துக்காகப் பெரும் பங்கை ஆற்றிய ஒரு வலிமையான மற்றும் லட்சியமான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.”
என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நம் இந்திய வரலாற்றில் உலகம் பெருமையுடன் ’தி நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கும் பெண்ணின் பாத்திரத்திற்கு நியாயம் செய்ய அனைத்து வகையிலும் உழைப்பேன். தனிப்பட்ட முறையில் சொன்னால், நான் இன்னும் ஒரு நடிகராக இதுபோன்ற முக்கியமான பாத்திரங்களுக்கு என்ன கொண்டு வர முடியும் என்பதை முயற்சி செய்ய ஆவலாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.