சினிமா செய்திகள்
மீராமிதுனின் யூடியூப் சேனல் முடக்கப்படுகிறதா?
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருடைய யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைத்தளத்தில் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனை அடுத்து அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதனையறிந்த மீராமிதுன் திடீரென தலைமறைவானார்.
இந்தநிலையில் அவர் கேரளாவில் இருப்பது தெரியவந்ததை அடுத்து தமிழக போலீசாரின் தனிப்படை கேரளா சென்று அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தது. இந்த நிலையில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருப்பதாகவும் தனக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்துவதாகவும் மீராமிதுன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்து யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து யூடியூப் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பப்ஜி மதன், கருப்பர் கூட்டம் உள்பட பல சர்ச்சைக்குரிய யூடியூப் சேனல்களை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதிய நிலையில் தற்போது மீராமிதுன் யூடியூப் சேனலையும் முடக்க திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.