தமிழ்நாடு
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கம்!
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய டுவிட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் தற்போது மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவரது அனைத்து டுவிட்டுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தை மீட்க அவரது தரப்பினர் தொழில்நுட்ப வல்லுநர்களை நாடி வருவதாகவும் விரைவில் அவரது டுவிட்டர் பக்கம் மீட்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் கடந்த 2000 ஆண்டுகளில் பிஸியாக இருந்த நடிகை குஷ்பு அதன் பின்னர் கருணாநிதி தலைமையில் திமுகவில் சேர்ந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் திமுகவில் இருந்து விலகிய பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பதும், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.