சினிமா செய்திகள்
வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைத்த ‘லியோ’: காரணம் இதுதான்!
நடிகர் விஜய்யின் ‘லியோ’ வெளியாவதற்கு முன்பே சாதனை படைத்திருக்கிறது.
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜன் நடிகர் விஜய்யும் இணைந்திருக்க கூடிய ‘லியோ’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
படத்தின் தலைப்பு முதற்கொண்டு காஷ்மீர் ஷெட்யூல், நடிகர்கள், தொழில்நுட்ப குழு யார் யார் என அனைத்தையும் வெளிப்படையாகவே படக்குழு அறிவித்துவிட்டு படப்பிடிப்பில் தற்பொழுது பிசியாக உள்ளது.
காஷ்மீர் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்தவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹைதராபாத் உள்ளிட்ட சில இடங்களில் படப்பிடிப்பு நடந்த திட்டமிட்டு இருக்கிறது. மே மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார் இயக்குநர்.
படம் ஏற்கனவே அறிவித்தபடி இந்த வருடம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்பதையும் உறுதிப்பட தெரிவித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இப்பொழுது ‘லியோ’ படத்தின் ப்ரீ- பிசினஸ் வெளிநாடுகளில் எவ்வளவு என்பது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில், நார்த் அமெரிக்காவில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்.
இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே இவ்வளவு அதிக தொகைக்கு வாங்கி இருப்பது ‘லியோ’ தான். இதற்கு முன்பு இந்த சாதனையை நடிகர் ரஜினிகாந்த் படம் (கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்) வைத்திருந்தது.
இதேபோல, யூகே மற்றும் யூரோப் பகுதிகளிலும், லியோ படத்தினை கிட்டத்தட்ட 14 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இவ்வளவு அதிக தொகை செலுத்தவில்லை. இதற்கு முன்பு நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு 12 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தார்கள். இதுமட்டும் இல்லாமல் இங்கு சேட்டிலைட் உரிமமாக சன் டிவி 40 கோடி ரூபாய்க்கும் ஆடியோ உரிமத்திற்கு சோனி மியூசிக் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.