தமிழ்நாடு
கஜா புயல்: நடிகர் விஜய் சேதுபதி ரூ 25 லட்சம் நிவாரண உதவி!
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை பிரபல நடிகர் விஜய் சேதுபதி வழங்குகிறார்.
சில தினங்களுக்கு நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த அதிதீவிர கஜா புயல் நாகையை சுற்றியுள்ள 7 மாவட்டங்களை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நாகை மாவட்டத்தை முழுமையாக சின்னாபின்னமாக்கியுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அத்தியாவசி பொருட்கள் கிடைக்காமல் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நிவாரண பணிகளில் களம் இறங்கியுள்ளார். இது தொடர்பாக விஜய் சேதுபதி பேசியபோது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும்.
லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள்.
நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார். மேலும் கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவிருப்பதாக தெரிவித்தார்.