சினிமா செய்திகள்
மேக்கப் அறையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை.. அதிர்ச்சியில் படக்குழுவினர்!
பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது மேக்கப் அறையில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை துனிஷா சர்மா தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பின்போது தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மறைந்த துனிஷா சர்மாவுக்கு வயது 21 என்பது குறிப்பிடதக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அந்த படப்பிடிப்பில் துனிஷா சர்மா கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் மேக்கப் அறையில் மேக்கப் போட்டு விட்டு கழிவறை சென்றதாகவும் கழிவறையிலிருந்து அவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை என்பதால் தான் சந்தேகம் அடைந்த படக்குழுவினர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துனிஷா சர்மா தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொலைக்காட்சி சீரியலில் நடித்துவரும் அவரது சக நடிகர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் அவர் தற்கொலை செய்து கொள்ள தூண்டியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பிஸியாக துனிஷா இருந்தார் என்றும் அவர் கடைசியாக பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிறந்த துனிஷா சர்மா, 2015 ஆம் ஆண்டு 13 வயதில் இருந்து தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறர். இந்தியில் அவர் பல முக்கிய சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சல்மான்கான் நடித்த ’டபாங் 3’ படம் உள்பட ஒரு சில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.