இந்தியா
நடிப்பதை நிறுத்துங்கள் மோடி: நடிகர் சித்தார்த் பாஜக இடையே வார்த்தைப் போர்!
![Modi and Siddharth - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/Modi-and-Siddharth.jpg)
நடிகர் சித்தார் சமூக வலைதளமான டுவிட்டரில் அவ்வப்போது நடப்பு அரசியல் மற்றும் சம்பவங்கள் குறித்து தனது கருத்தினை பதிவிட்டு வருபவர். இந்நிலையில் அவர் தற்போது புல்வாமா தாக்குதலில் பாஜகவின் அரசியலை விமர்சித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை உங்கள் அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள் என கூறும் பாஜக தான் அதனை தங்கள் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். நாட்டின் பிரதமர் மோடி கூட இதில் அரசியல் பேசுகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் நமது பாதுகாப்பு படையினரை நம்ப வேண்டும் மற்றும் அவர்களுக்காக நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் சிலர் தற்போதுவரை அவர்கள் மீது கேள்வி எழுப்புவது ஏன் என இதுவரை எனக்கு புரியவில்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சித்தார் தனது டுவிட்டர் பக்கத்தில், மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள் என விளாசியுள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் இந்த கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதில், 26/11 பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர், காயப்படுத்தப்பட்டனர். அப்போது விமானப்படை தாக்குதல் நடத்த கேட்டபோது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அனுமதிக்கவில்லை. ஆனால் மோடி அரசு படையினருக்கு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! என தெரிவித்துள்ளார்.