சினிமா
நடிகர் சரத்பாபு காலமானார்.. நண்பர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து வந்த சீனியர் நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மே 22ம் தேதி காலமானார். அவருக்கு வயது 71.
காய்ச்சல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சரத்பாபுவுக்கு அரிய வகை புற்றுநோய் (மல்டிபிள் மைலோமா) பாதிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை செய்து வந்த நிலையிலும், அவரது உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கின. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
சரத்பாபுவின் மறைவு செய்தியை அறிந்ததுமே என் நண்பர் உயிரிழந்து விட்டார். இது எனக்கு பேரிழப்பு என உருக்கமாக ட்வீட் போட்ட ரஜினிகாந்த், சென்னைக்கு சரத்பாபுவின் உடல் இன்று கொண்டு வரப்பட்ட நிலையில், முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் வந்து இரங்கல் தெரிவித்தார்.
கருப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு கலங்கிய கண்களுடன் தனது நண்பர் சரத்பாபுவின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே நாங்கள் இருவரும் நண்பர்கள்.. முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளோம். அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.
சரத்பாபு எப்போதுமே சிரித்த முகத்துடனே அனைவரிடமும் பேசி பழகக்கூடிய ஒரு நல்ல நபர் எந்த கெட்டப்பழக்கமும் அவருக்கு இல்லை. நான் சிகரெட் பிடிப்பது அவருக்கு பிடிக்காது.
நான் வாயில் சிகரெட் வைத்தாலே தட்டி விட்டு விடுவார் சரத்பாபு என தனது நண்பரின் மறக்க முடியாத நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த்.