சினிமா செய்திகள்
ஒளிப்பதிவு திருத்த சட்டம்: சூர்யா எதிர்த்த நிலையில் வரவேற்பு தெரிவித்த கார்த்தி!
மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்திற்கு சூர்யா உள்பட பல நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சூர்யாவின் சகோதரரும், நடிகருமான கார்த்தி அதில் உள்ள ஒரு சில திருத்தங்களை வரவேற்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஒளிப்பதிவு திருத்த சட்டம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன், சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி இந்த சட்டத் திருத்தம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தாலும் அதில் உள்ள ஒரு சில திருத்தங்களை வரவேற்று தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்:
எப்போது வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் இந்த சட்ட திருத்தத்தில் உள்ளது. இதனால் வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக் கூடும். அதனால் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும். அதே நேரத்தில் பைரசியை தடுக்க இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் விதமாக உள்ளது.
ஏற்கனவே நடிகர் கார்த்தி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பதும் அதேபோல் மத்திய அரசின் பல திட்டங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
While draft measures to curb piracy are commendable, it is highly undesirable to strangle freedom of expression in a civilized society as ours. Therefore request the goverment to heed our request.#CinematographAct2021 #FreedomOfExpression
— Karthi (@Karthi_Offl) July 2, 2021