தமிழ்நாடு
பட்டாசு ஆலை விபத்து: பாதிக்கப்பட்டோர்களுக்கு வழங்கிய காசோலை திரும்பியதால் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 27 பேர் பலியாகினர் என்பதும் ஏழு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடி விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் பலியான 27 பேர்களின் குடும்பத்தினர்களுக்கும் பட்டாசு ஆலையின் நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் ஓரளவுக்கு நிம்மதியாக அடைந்தனர்.
ஆனால் பட்டாசு ஆலை நிர்வாகம் வழங்கிய ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலை பணமில்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பணமில்லாத காசோலை வழங்கிய பட்டாசு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 27 பேரின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கும் உறவினருக்கு வழங்கிய காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி அது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.