கிரிக்கெட்
கிரிக்கெட்டில் ஓங்கி ஒலித்த தமிழ்க் குரல் – அப்துல் ஜப்பார் காலமானார்
கிரிக்கெட்டில் தனது கம்பீர தமிழ்க் குரலால் வர்ணனை செய்து, தனக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருந்த அப்துல் ஜப்பார் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த எஸ்.எம். அப்துல் ஜப்பார், தன்னுடைய மேற்படிப்பிற்காக இலங்கைக்கு குடிபெயர்ந்தார். ஆனால், அவர் கல்வியை முடித்த பிறகு அங்கு நிலவிய பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிட்டார்.
1980-களில் கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்யத் தொடங்கினார். குறிப்பாக, 1982-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டியை தமிழில் சிறப்பாக வர்ணனை செய்ததற்காக, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அப்துல் ஜப்பாரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
“இந்த ரணகளத்திலேயும் ஒரு…”- முதல் டெஸ்டு சொதப்பல்; பிரித்வி ஷாவின் போஸ்ட்!!!
பின்னர், 1999 உலகக் கோப்பைத் தொடரில், ஐபிசி வானொலிக்காக வர்ணனையாளராக பணியாற்றினார். நிறைய கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு அழைத்து விருந்து அளித்து உபசரித்தார். ‘அழைத்தார் பிரபாகரன்’ எனும் நூலில் தமிழீழ பயணம், பிரபாகரனுடனான சந்திப்புகள் குறித்து அப்துல் ஜப்பார் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.