இந்தியா
ராஜிவ் காந்தியின் பாரத ரத்னா விருதை திரும்ப பெற தீர்மானம்: ஆம் ஆத்மீ பெண் எம்எல்ஏ ராஜினாமா!
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆம் ஆத்மீ பெண் எம்எல்ஏ அல்கா லம்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நடந்துகொண்டதால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்ப பெற வேண்டும் என ஆம் ஆத்மீ நேற்று டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனையடுத்து இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மீ கட்சியின் பெண் எம்எல்ஏ அல்கா லம்பா வெளிநடப்பு செய்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தான் நான் வெளிநடப்பு செய்தேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்னைத் தொலைபேசியில் அழைத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொன்னார். அதற்கு நான் ராஜினாமா செய்யத் தயார் என்று கூறியுள்ளேன். நாளை எனது ராஜினாமா கடிதத்தை அளிப்பேன். எந்தவிதமான விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் அல்கா லம்பா.