தமிழ்நாடு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ‘WAR ROOM’ அமைத்தது தமிழ்நாடு அரசு!
தமிழகம், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித் தவித்து வருகிறது. இதையொட்டி நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுமைக்கும் முழு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அமல் செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் முதல்வராக கடந்த 7 ஆம் தேதி பதவியேற்ற மு.க.ஸ்டாலின், ‘கொரோனா தொற்றுப் பரவலை மாநில அளவில் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் விரைவில் மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட ‘வார் ரூம்’ என்னும் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். அதன் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனாவின் நிலை எப்படி இருக்கிறது என்றும் அதற்கு உரிய நடவடிக்கையை முடுக்கி விடுவதும் சாத்தியப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்ப, இன்று தமிழக அரசு சார்பில் ‘கொரோனா வார் ரூம்’ அமைத்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி டாரெஸ் அகமது ஐஏஎஸ் இந்த வார் ரூமின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்.
மேலும் கே.நந்தகுமார் ஐஏஎஸ், டாக்ரட் எஸ்.உமா ஐஏஎஸ், டாக்டர் எஸ்.வினீத் ஐஏஎஸ், டாக்டர் கே.பி.கார்த்திகேயன் ஐஏஎஸ் மற்றும் ஆர்.அழகுமீனா ஆகியோர் முக்கிய அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.