தமிழ்நாடு
திருமண வீட்டில் அரிவாள் வீச்சு: மணமகள், மணமகள் உறவினர்கள் செய்த கலவரம்
சென்னையில் திருமண வீட்டில் டான்ஸ் ஆடுவதில் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாள் வெட்டு நடந்ததாகவும் இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று தினகரன் மற்றும் மஞ்சுளா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
அப்போது மணமகளின் அண்ணன் வினோத் என்பவரின் நண்பர்களுக்கும் மணமகனின் நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. யார் முதலில் டான்ஸ் ஆடுவது என்பது குறித்த தகராறு ஒரு கட்டத்தில் கைச் சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் திடீரென வினோத்தின் நண்பர்கள் பத்து பேர் கொண்ட கும்பல் திருமண மண்டபத்திற்குள் புகுந்து மணமகனின் நண்பர்களை சரமாரியாக அரிவாளால் தாக்கி விட்டு மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை கொண்டு தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே திருமணத்திற்கு 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அளவுக்கு அதிகமாக திருமண வீட்டில் கூடியிருந்தது குறித்து திருமண வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் அரிவாள் வெட்டு வைத்து நடத்திய வினோத்தின் நண்பர்களை பிடிப்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.