தமிழ்நாடு
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் திடீர் மாற்றம்: முழு விபரங்கள்!
![medical - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/medical.jpg)
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த கலந்தாய்வில் சில மாற்றங்களை செய்து மருத்துவக் கல்வி இயக்ககம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகின்றன.
இதனையொட்டி தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் ஏற்கனவே வெளியிட்ட மருத்துவ கலந்தாய்வு அட்டவணை சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த அட்டவணைப்படி இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
பிப்ரவரி 2ஆம் தேதி காலை 8 மணி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். ஏற்கனவே வெளியிட்டுள்ள அட்டவணையில் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது பிப்ரவரி 7 முதல் 10 ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். மருத்துவ ஒதுக்கீட்டிற்கான ஆணையை மாணவர்கள் 16ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை அசல் சான்றிதழ் உடன் சென்று கல்லூரியில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு குறித்த முழு விவரங்களை சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், மாணவர்கள் அதனை பார்த்து தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.