இந்தியா
“சூத்திரர்களை மட்டும் அப்படி அழைத்தால்…”- BJP எம்.பி-யின் ஆணவப் பேச்சு
மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் பெயர் பெற்றவர். இதற்கு முன்னரும் பல சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்துள்ளவர்.
மத்திய பிரதேசத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரக்யா, வேதங்களால் வகுக்கப்பட்ட 4 வகை பிரிவுகள் குறித்துப் பேசினார். ‘அவர், ஒரு சத்ரியனை சத்ரியன் என்று அழைத்தால் அது குறித்து அவர்கள் வருத்தப்படுவதில்லை. ஒரு பிராமணனை பிராமணன் என்றழைத்தால் அதற்கு அவர்கள் வருந்துவதில்லை. ஒரு வைசியனை வைசியன் என்று பெயரிட்டு அழைத்தால் வருத்தமுறுவதில்லை. ஆனால், சூத்திரர்களை மட்டும் சூத்திரர் என்றழைத்தால் அதற்கு அவர்கள் வருத்தமடைகிறார்கள். இதற்கு காரணம் என்ன? ஏனென்றால் அவர்களுக்கு இது குறித்தப் புரிதல் இல்லை’ என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 4 வகை வர்ணங்களில் சூத்திரர் வர்ணம்தான் கீழானது. மற்ற 3 வகை வரணங்களுக்குப் பணிவிடை செய்வதுதான் சூத்திரர்களின் வேலை என்று வேதங்கள் வரையறுக்கின்றன. இந்தியாவில் இருக்கும் பெரும் பகுதியானோர் சூத்திரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றில் பிரக்யா பேசிக் கொண்டிருக்கையில், தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.