தமிழ்நாடு
நீட் தேர்வு விலக்கு கோரி சட்டமுன்வடிவு: சட்டப்பேரவையில் உதயநிதி கேள்விக்கு முதல்வர் தகவல்!
நீட் தேர்வு விலக்கு கோரி நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பேசியபோது, ‘நீட் தேர்வு காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றார்கள். முந்தைய அரசு செயல்படாத அரசாக இருந்தால் நீட் தேர்வு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது இருக்கும் தமிழக அரசு நீட் தேர்வு பாதிப்பை அறிய ஒரு குழு அமைத்து, அதன் கருத்துக்கள் தெரிந்துகொண்டு அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் அதுதொடர்பாக அது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
உதயநிதிக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘நீட் தேர்வு விலக்கு என்பது குறித்த நடவடிக்கையை கண்டிப்பாக எடுப்போம். ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து அலசி ஆராய்ந்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்க ஓய்வு பெற்ற நீதியரசர் மகராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவருடைய அறிக்கையையும் பெற்று வைத்துள்ளோம்.
அந்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும். அதுமட்டுமின்றி இந்த கூட்டத்தொடரிலேயே நீட் விலக்கு கோரி சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்ற உறுதிமொழியை கூறுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வு தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றி விலக்கு கோரினால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.