தமிழ்நாடு
நீலகிரி கலெக்டராக இருந்த இன்னசன்ட் திவ்யாவுக்கு புதிய பதவி: தலைமை செயலாளர் உத்தரவு!
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இன்னசென்ட் திவ்யா அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அவரது இடமாற்றம் அரசியல் ஆக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்த இன்னசென்ட் திவ்யா அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற உடன் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் என்பது தெரிந்ததே.
அதேபோல் கொரோனா வைரஸ் முதல் அலை பரவிய காலத்தில் அவரது பணி மிகவும் சிறப்பானது என்று அனைவராலும் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யானைகள் வழித்தடத்தை மீட்பது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தினால் அவரை இடமாற்றம் செய்ய பலர் முயற்சி செய்ததாகவும் இந்த நிலையில் சமீபத்தில் அவரது இடமாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆட்சி பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட இன்னசன்ட் திவ்யா தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையரும், பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனருமான சுப்பையா ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு பால்வளத்துறையின் இயக்குனராகவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பொறுப்பை வகித்து வந்த கந்தசாமி ஐ.ஏ.எஸ். பதவியிடம் மாற்றப்பட்டு பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனராகவும் மற்றும் வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஏ.ராமன் ஐ.ஏ.எஸ். கூடுதலாக பொறுப்பு வகித்துவந்த தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் பொறுப்பிற்கு, நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா நியமிக்கப்படுகிறார்.”
இவ்வாறு அந்த உத்தவில் கூறப்பட்டுள்ளது.