தமிழ்நாடு
அத்துமீறி நுழைந்த கமல் மகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் புகார்!
தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கோவை முழுவதும் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அவருடன் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் மட்டுமே வாக்குச்சாவடிகள் செல்ல அனுமதி உண்டு. ஆனால் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் கமல்ஹாசனுடன் சென்றதாக தெரிகிறது.
இது குறித்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஸ்ருதிஹாசன் வாக்குச்சாவடிக்குள் சென்றுள்ளதாகவும் அத்துமீறி அவர் நுழைந்ததை அடுத்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.