தமிழ்நாடு
ரூ.27 கோடி சொத்து, 85 சவரன் நகைகள்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார்!
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாகவும், 85 சவரன் நகைகள் வாங்கி உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு சொந்தமான 43 இடங்களில் இன்று அதிகாலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்டவற்றில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 27 கோடியே 23 லட்சம் சொத்துக்கள் குறித்து உள்ளதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.
மேலும் பதவி காலத்தில் டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜேசிபி வாங்கியதாகவும், அமைச்சராக இருந்தபோது ரூபாய் 50 லட்சத்திற்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது..
அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம் பகுதியில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு விவசாய நிலங்களை அவர் வாங்கியுள்ளார் என்றும் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகள் வாங்கியுள்ளதாகவும், அமைச்சராக இருந்த காலத்தில் மனைவி, மகள்கள் மற்றும் தந்தை பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும் விஜய்பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி லஞ்சப்பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் விஜயபாஸ்கர் நடத்தி வந்துள்ளார் என்றும் 2013-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து உள்ளதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.