சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விபத்து: உயிர்ப்பலி ஏற்பட்டதால் மணிரத்னம் மீது வழக்கு!

Published

on

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த வாரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அப்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் குதிரை ஒன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து விலங்குகள் நல வாரியம் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தெலுங்கானா மாநில விலங்கு நல வாரியம் விசாரணை செய்ய உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தின் கதை வரலாற்று பின்னணியை கொண்டது என்பதால் இந்த படத்தில் ஏராளமான குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விலங்குகள் நலவாரியத்தின் அனுமதியுடன் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் திடீரென ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்துள்ளதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version